1 கொரிந்தியர் 4 – “அகந்தையிலிருந்து தாழ்மைக்கு"
1 கொரிந்தியர் 4 – “அகந்தையிலிருந்து தாழ்மைக்கு”
அன்பான சகோதரர் சகோதரிகளே,
1 கொரிந்தியர் 4ஆம் அதிகாரத்தில், அப்போஸ்தலர் பவுலடியார் கோபமாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் அது சாதாரண கோபம் அல்ல — அது ஆவிக்குரிய தந்தையின் மன வேதனை. கொரிந்தியர் சபையில் அகந்தை, பிரிவு, மனிதரை உயர்த்தும் மனோபாவம் வளர்ந்தது. அதனால் பவுல் கடுமையாக எச்சரிக்கிறார்.
1. நாம் சபைக்கு உக்கிராணக்காரர்கள்; மேடை நட்சத்திரங்கள் அல்ல (வ.1–5)
“. . . இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்..” (1 கொரிந்தியர் 4:1)
தேவன் நமக்குக் கொடுத்த பொறுப்பில் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.
மனிதர்களின் பாராட்டு முக்கியமில்லை. இறுதி தீர்ப்பு தேவனிடமிருந்து வரும்.
கிறிஸ்துவை பின்பற்றுவோம்; மனிதரை அல்ல.
2. ஆவிக்குரிய அகந்தை ஆபத்தானது (வ.6–8)
கொரிந்தியர்களுக்கு உணர்வு உண்டாகும்படி, பவுலடியார் 'கிண்டலாக' அல்லது 'பரிகாசமாக' இப்படி எழுதுகிறார்:
“இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; . . . (1 கொரிந்தியர் 4:8)
கொரிந்தியர் நினைத்தார்கள்:
அவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
நாங்கள் எதிலும் மனந்திரும்ப அல்லது திருந்த தேவையில்லை.
ஆனால் அவர்களின் அகந்தை அவர்களின் கண்களை குருடாக்குகிறது.
நாம் “நான் முதிர்ச்சி அடைந்துவிட்டேன், எல்லாம் கற்றுக்கொண்டேன்” என்று நினைக்கும் நேரமே வீழ்ச்சி ஆரம்பம் என்பதை மறக்கவேண்டாம்.
3. உண்மையான அப்போஸ்தல வாழ்க்கை – துன்பமும் தாழ்மையும் (வ.9–13)
பவுல் தன் வாழ்க்கையை கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:
- பசி
- துன்புறுத்தல்
- அவமானம்
- தாழ்வு
ஆனால், தன் வாழ்க்கையில் பல துன்பங்கள் இருந்தாலும், அவர் எப்படி பதில் அளிக்கிறார் என்பதை பாருங்கள்:
சாபித்தவர்களை ஆசீர்வதித்தார்
துன்பத்தில் பொறுமை கொண்டார்
அவதூறுக்கு நன்மையால் பதிலளித்தார்
இதன் மூலம் நாம் அறியவேண்டியவைகள் என்ன?
உண்மையான கிறிஸ்தவம் சுக வாழ்க்கை அல்ல; அது கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கை ஆகும்.
4. தந்தையின் அன்பான எச்சரிக்கை (வ.14–17)
உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் (1 கொரிந்தியர் 4:14 )
பவுல் கொரிந்திய சபையின் ஆவிக்குரிய தந்தை.
யாரிடம் அன்பு இருக்குமோ, அங்கே கடிந்துக்கொள்ளுதலும், சீர்திருத்துதலும் இருக்கும்.
தேவன் நம்மை திருத்தும்போது அது தண்டனை அல்ல — அது நம்மை தூக்கி எடுத்து மேன்மைபடுத்தும் வளர்ச்சியின் பாஎை என்பதை அறிந்துக்கொள்வோம்.
5. தேவனுடைய ராஜ்யம் வார்த்தையில் அல்ல, வல்லமையில் (வ.18–21)
“தேவனுடைய ராஜ்யம் வார்த்தையிலல்ல, வல்லமையிலே இருக்கிறது.”
வெறும் பேச்சு போதாது.
வாழ்க்கை மாற்றம் தான் உண்மையான சாட்சி.
பவுல் கேட்கிறார்: “நான் தடியுடன் வரவா? அன்புடன் வரவா?”
அவர்களின் மனநிலையே பதிலை தீர்மானிக்கும்.
முக்கிய கருத்து
1 கொரிந்தியர் 4 நமக்கு கற்றுக் கொடுப்பது:
அகந்தை சபையைப் பிரிக்கிறது.
தாழ்மை சபையை கட்டுகிறது.
உண்மையான ஊழியர் புகழை நாடமாட்டார்; நம்பிக்கையை நாடுவார்.
தேவனுடைய ராஜ்யம் வெளிப்படுவது வாழ்க்கை மாற்றத்தால் ஆகும்.

Comments
Post a Comment